எரிபொருள் விலை உயர்வால் பெரும்பாலான உலகளாவிய விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளைக் குறைத்துவரும் நிலையிலும், தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனது தற்போதைய அனைத்து சர்வதேச வழித்தடங்களையும் எந்தக் குறைப்புமின்றி முன்னெடுக்கும் என்று அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலக்க, இதுதொடர்பாக தெரிவிக்கையில்,வரையறுக்கப்பட்ட காலத்திற்கு கடனுக்கு எரிபொருள் வழங்குவதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் விமான நிறுவனத்திற்கு ஒத்துழைப்பதற்காக மானியம் வழங்க திறைசேரி முன்வந்துள்ளது.எனவே, நீண்ட தூர விமானச் சேவைகளைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ நாம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். உலகளாவிய எரிபொருள் விலை அழுத்தம் அனைத்து விமான நிறுவனங்களையும் பாதித்து வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கை அபாயகரமானதாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போதைக்கு, உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறை சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், பல விமான நிறுவனங்கள் தவிர்த்துவரும் ஒரு செயலை இலங்கை செய்து வருகிறது. அதாவது, அனைத்து வழித்தடங்களையும் திறந்து வைத்துள்ளது.



