அஸர்பைஜானில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான மனோஜ் சுரங்க எனப்படும் ‘படுவத்தே சாமர’ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (10) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
அஸர்பைஜானில் இருந்து இந்தியாவின் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்ட இவர், அங்கிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் (UL-196) மூலம் நேற்று இரவு 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நீண்ட காலமாக துபாயில் தலைமறைவாக இருந்த இவர், சுமார் 1 வருடத்திற்கு முன்பு அஸர்பைஜானுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் அங்கு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
துசித ஹல்லொலுவ மீது தாக்குதல் நடத்தியமை, கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்கான ஆயுதங்களை வழங்கியமை மற்றும் இலங்கையில் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் பிரதான சந்தேகநபராக இவர் கருதப்படுகிறார்.
விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் 48 வயதான இவரைக் பொறுப்பேற்றதுடன், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைத்துள்ளனர்.



