பாகிஸ்தான் சகலதுறை வீரர் முகமது நவாஸ் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணையை ஆரம்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தின்போதும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ஊக்கமருந்து சோதனையிலேயே அவர், போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.), பாக். கிரிக்கெட் சபைக்கு அறிவித்ததை அடுத்தே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதை பாக். கிரிக்கெட் சபை பேச்சாளர் ஒருவர் உறுதி செய்திருப்பதோடு விசாரணை பூர்த்தியான பின்னர் ஐ.சி.சி. இடம் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
32 வயதான முகமது நவாஸ் டி20 உலகக் கிண்ண தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 15 ஓட்டங்களை சேர்த்து இருந்தார். பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். முகமது நவாஸ் போதைப்பொருள் சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் சர்ரே கவுண்டி அணியுடன் அவர் மேற்கொண்டிருந்த டி20 பிளாஸ்ட் தொடருக்கான ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



