ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் 6 சீனர்கள் கைது

Karan
By
Karan
1 Min Read

நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் ஆறு சீனப் பிரஜைகள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜைகள் அனைவரும் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தாய் ஏர்வேஸின் TG-307, எயார் சைனாவின் CA-425 மற்றும் தாய் ஏர் ஏசியாவின் FD-140 ஆகிய விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் உற்பத்தியான சுமார் ஒரு கோடியே 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான 75,900 சிகரெட்டுகள் இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளைத் தடுப்புக் காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *