புத்தாண்டு பண்டிகைக் காலத்தையொட்டி நடைமுறைப்படுத்தப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகைக் காலத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுக்கும் விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமை, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், சந்தையில் நுகர்வோரை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்குதல் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை எமது அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நுகர்வோர் சந்தையில் அநீதி அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலுவலக நேரங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் தகவல்களை வழங்க முடியும்.
அதற்கமைய அதிகாரிகள் தேவையான தலையீடுகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




