இந்திய பிரீமியர் லீக் உள்ளிட்ட சர்வதேச ரீதியிலான லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கு, தனக்கு ‘தடையில்லா சான்றிதழை’ வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தரவிடக் கோரி வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எதிராக ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

சர்வதேச லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தடையில்லா சான்றிதழ் அவசியமாகும். அதனைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, தனக்குச் சாதகமான ஓர் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலங்கை கிரிக்கெட் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த மனுவிற்கு எதிராகத் தமது தரப்பு ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்கிய கொழும்பு மாவட்ட நீதிமன்றம், இந்த மனுவை மீளவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.




