ஏற்படக்கூடிய எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையினால் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கும் பெருந்தோட்டச் சமூகத்திற்கும் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று நேற்று (10) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, காலநிலை மாற்றம் மற்றும் வானிலையியல் துறையின் நிபுணரான கலாநிதி ரஞ்சித் புண்யவர்தனவினால் எல் நினோ நிலைமை குறித்தும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்கூட்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தேசிய உற்பத்தி இலக்குகளைப் பாதுகாத்து, பெருந்தோட்டச் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதுடன், குறிப்பாகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
மண் மற்றும் நீர் பாதுகாப்பு, நுண்பாசன (Micro Irrigation) தொழில்நுட்பத்தை மேம்படுத்தல், வானிலை தகவல்களை விவசாயிகளுக்கு விரைவாக வழங்குதல், கள உத்தியோகத்தர்களின் திறன் மேம்பாடு மற்றும் நவீன தொழில்நுட்ப தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.



