எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், சளைக்காமல் முன்னோக்கிச் செல்லக்கூடிய வலுவான பொருளாதார நிலைமை நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அணில் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த கால மற்றும் தற்போதைய அந்நியச் செலாவணியைச் சுட்டிக்காட்டி, பொருளாதாரம் வீழ்ச்சியடையும், அரசாங்கம் கவிழும் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்நியச் செலாவணி வீதம் 370 ஆகக் காணப்பட்ட நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததாகவும், அதேபோன்று தற்போதைய அரசாங்கமும் வீழ்ச்சியடைந்து, வீட்டுக்குப் போகும், ஆட்சியைக் கைப்பற்றலாம் என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் கனவு கண்டு வருகின்றனர்.
எனினும், சரியாகக் கணிப்பீடு செய்தால், 2022 இல் டொலர் 370 ரூபாவுக்குச் சென்றதாலோ அல்லது அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்த முடியாததாலோ அன்றைய ஆட்சி கவிழவில்லை. தவறான தீர்மானத்தினால் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து, நிதி முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுக்காமல் விட்ட தவறினாலேயே அந்த வீழ்ச்சி ஏற்பட்டது. தவறான கொள்கை, தவறான முகாமைத்துவம், இறக்குமதித் தடைகள், கடனை மீளச் செலுத்தாமை, கையிருப்பைப் பாதுகாக்காமை போன்ற நெருக்கடிகளின் விளைவாகவே அந்த ஆட்சி கவிழ்ந்தது என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



