அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான டவர் மண்டப நாடக அரங்கப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி தேசிய மட்டத்தில் பங்குபற்றி பாரிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நாடகத்துறையில் நீண்டகால பாரம்பரியமும் பல சாதனைகளும் கொண்ட இக்கல்லூரி, வழமை போன்று இம்முறையும் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி பல முக்கிய விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இப்போட்டியில் மகாஜனாக் கல்லூரி மாணவர்களின் நாடகம் நடுவர்களின் பலத்த பாராட்டுதலை பெற்றதுடன், தேசிய மட்டத்தில் ‘சிறந்த நாடகம்’ எனும் விருதையும் வென்றெடுத்தது. அத்துடன், தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தியமைக்காக ‘சிறந்த நடிகர்’, நாடகத்தை நேர்த்தியாக வழிநடத்தியமைக்காக ‘சிறந்த நெறியாளர்’ மற்றும் நாடகத்திற்கு உயிரோட்டம் அளித்தமைக்காக ‘சிறந்த இசையமைப்பாளர்’ ஆகிய மிக உயரிய விருதுகளையும் கல்லூரி தன்வசப்படுத்திக் கொண்டது.
தேசிய மட்டத்தில் இத்தகைய பிரம்மாண்ட சாதனை படைத்து, கல்லூரிக்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்த நாடகத் துறையினர், மாணவர்கள் மற்றும் நெறியாளர்களுக்குப் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.



