“வழிகாட்டல்களை சரியாக புரிந்துகொண்டு செயற்படுவது ஹஜ் யாத்திரையின் உண்மையான அர்த்தத்தை நிறைவேற்றுவதாக அமையுமென்பதுடன், அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“மேலும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை மிகச் சிறப்பாக பிரதிபலிக்கும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளின்படி வாழ்வோம்”எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய முஸ்லிம்களால் இன்று கொண்டாடப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இன்று நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கான காரணம் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையாகும். இதனால் சிதைந்து போயிருப்பது அமைதியாகும். இந்தத் தருணத்தில் உலகம் முழுவதும் தோன்றியுள்ள யுத்த சூழ்நிலைகள், நம் இதயங்களில் அமைதியையும் நம்பிக்கையையும் மேலும் மேலும் வலுப்படுத்த வேண்டுமென்பதையே நமக்கு உணர்த்துகின்றன.
அதேபோல் நமது தாய்நாட்டில் இந்தத் தருணத்தில் எதிர்காலம் குறித்த ஒரு நிச்சயமற்ற தன்மை மற்றும் ஒரு கடினமான காலகட்டத்தை நாம் கடக்க வேண்டியுள்ளதையும் காண முடிகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது நாட்டை பிளவுகளால் அல்ல, ஒற்றுமையாலேயே கட்டியெழுப்ப முடியும். உண்மையை உண்மையாக காண்பதற்கும் அதனை அச்சமின்றி வெளிப்படுத்தி செயலாற்றுவதற்கும் தைரியமும் சக்தியும் தேவையாகும்.
இதற்காக அர்ப்பணிப்பு, தியாகம், பரஸ்பர புரிந்துணர்வு, ம் நல்லெண்ணத்துடன் செயற்படுவது மிக முக்கியமாகும்.
ஹஜ் கொண்டாட்டத்தினூடாக நமக்கு காட்டப்படும் உன்னதமான போதனைகள், முன்மாதிரியான வழிகாட்டல்களை நமக்கு வழங்கியுள்ளன. இந்தத் தருணத்தில் அந்த வழிகாட்டல்களை சரியாக புரிந்துகொண்டு செயற்படுவது ஹஜ் யாத்திரையின் உண்மையான அர்த்தத்தை நிறைவேற்றுவதாக அமையும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். பன்முகத்தன்மையில் ஒற்றுமையை மிகச் சிறப்பாக பிரதிபலிக்கும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளின்படி வாழ்வோம்.
இலங்கையின் அனைத்து முஸ்லிம் சகோதர மக்களுக்கும் அமைதி மலரும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.ஈதுல் அழ்ஹா முபாரக்..!” எனத் தெரிவித்தார்.



