குடிநீர் கட்டணத்தில்,இந்த ஆண்டில் முதல் அரையாண்டுக்காலப் பகுதியில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
2024 ஜூலை 15 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண சூத்திரத்தின்படி, முக்கிய செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நீர் விநியோக அலகு விலையை அரையாண்டுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிதி நிலை அறிக்கையின் அடிப்படையிலான பகுப்பாய்வின் பிரகாரமே,நீர்விநியோக
செயற்பாடுகளுக்கான செலவுகள் ஈடுசெய்யப்படுவதையும் சபை உறுதிப்படுத்தியுள்ளது.எனவே, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு நீர் விற்பனை அலகு விலையை அதிகரிக்காமலிருக்க முடிவு செய்துள்ளது.இதன் பிரகாரம் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு தற்போதைய நீர் கட்டணத்தைத் திருத்தாதிருக்க வேண்டுமென வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



