மீண்டும் ஒரு கொடூர யுத்தம் ஏற்படாத சமூக சூழலை கட்டியெழுப்ப வேண்டும்

1 Min Read

30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்தத்தின் சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த நமது கௌரவத்துக்கு பாத்திரமான முப்படை வீரர்களுக்கு எனது நன்றி கலந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்து, உடல் பாகங்களைத் தியாகம் செய்து, இரத்தம் சிந்தி நாட்டிற்காக நிறைவேற்றிய கடமையை நாம் மதிக்கிறோம். இதற்காக எமது மரியாதையை செலுத்துகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பத்தரமுல்லை பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைந்து காணப்படும் படைவீரர் நினைவுத் தூபியில் இன்று (20) இடம்பெற்ற படை வீரர்கள் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். நினைவுத் தூபிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மலரஞ்சலி செலுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

யுத்தத்தால், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிலையான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். மீண்டும் இத்தகைய யுத்தமொன்று உருவாகாத வகையில், பயங்கரவாத சூழலொன்று உருவாகாத வகையில் நாட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் நல்லிணக்க முன்னெடுப்புகளும் நடைபெற வேண்டும். ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடுகளைப் பேணிக் காத்து நாட்டை சௌபாக்கியம் நோக்கி அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இதன் பொருட்டு முப்படை வீரர்கள் நிறைவேற்றிய மகத்தான பணிக்கு என்றும் நாம் எமது மரியாதையைத் செலுத்துகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *