இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஈரானுக்கு எதிரான சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.
இஸ்ரேல் சந்தேகம்
அத்துடன், அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த ஒப்பந்தங்களை எட்டாமல் முறிந்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் முன்னெடுக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுமா என்பதில் இஸ்ரேல் சந்தேகம் கொண்டுள்ளது. ஆனால், இஸ்ரேலின் கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்காவுக்கு அழுத்தமளித்து வருகிறது.
அத்துடன் எந்தவொரு சாத்தியமான ஒப்பந்தத்தின் கீழும் பிராந்தியத்தில் இஸ்ரேலின் இராணுவத்திற்கு சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பை பாதுகாக்கவும் நெதன்யாகு அரசாங்கம் தீவிரம் காட்டி வருக்கிறது.
மட்டுமின்றி, ஈரானின் இராணுவத் திறன்கள் குறித்த புதிய உளவுத்துறை தகவல்களை ட்ரம்பிடம் வழங்கவும் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகமாக அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள இஸ்ரேல், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை இருப்புக்களின் முன்னேற்றம் குறித்து கவலை கொண்டுள்ளது.
அத்துடன், 12 நாட்கள் நீடித்த போரில் ஈரானின் செயற்பாடுகள் இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், துரித நடவடிக்கை எடுக்காவிட்டால், ஈரான் வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் 1,800-2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் குவிக்கக் கூடும் என்றே இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளது.
ஆனால், ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என்றும், இருப்பினும் எதற்கும் தயார் நிலையிலேயே ஈரான் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு புறப்படும் முன்பு நெதன்யாகு தெரிவிக்கையில், புதன்கிழமை ட்ரம்புடனான சந்திப்பில் ஈரான் விவகாரம் முதன்மையானதும் முக்கியமானதுமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஒரு ஒப்பந்தத்தை
ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து இரு தலைவர்களுக்கும் இடையிலான ஏழாவது சந்திப்பு இதுவாகும். இந்த நிலையில், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பாதுகாப்பை விரும்பும் உலகில் உள்ள எவரும், ஈரான் தொடர்பில் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான எந்தவொரு ஒப்பந்தத்திலும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பில் வைத்திருப்பதை கைவிடுவது, செறிவூட்டலை முற்றிலுமாக நிறுத்துவது, பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில் வரம்புகளை நிர்ணயிப்பது மற்றும் பிராந்திய பிரதிநிதிகளுக்கான அதன் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை அமெரிக்காவிற்கு இஸ்ரேல் அழுத்தமளிக்க முயன்று வந்துள்ளது.

ஆனால், இஸ்ரேலின் ஆதிக்கத்தை உணர்ந்துள்ள ஈரான் அணுசக்தி குறித்து விவாதிக்க மட்டுமே தயாராக இருப்பதாக வலியுறுத்தியுள்ளது. வார இறுதியில், மற்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு அந்த ஒரு ஒப்பந்தத்தை தான் ஏற்கக்கூடும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்தே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா விரைந்துள்ளார். ஆனால், நெதன்யாகு திட்டமிடுவது போல் சாத்தியமான ஒரு இராணுவ நடவடிக்கைக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.




