இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் என மலேசியாவில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மோடி மலேசியா பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்திற்கு நேரில் வந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மோடியை வரவேற்றார்.
இதனை தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டிற்கு என்னால் வர முடியவில்லை.
விரைவில் மலேசியா வருவேன் என என் நண்பர் அன்வர் இப்ராஹிமிடம் உறுதி அளித்து இருந்தேன். அதன்படி இப்போது வந்துவிட்டேன். இது 2026 ஆம் ஆண்டின் எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது. உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா.
இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் விஷயங்கள் பல உள்ளன. இங்குள்ள நீங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் உயிருள்ள பாலமாக இருக்கிறீர்கள்.
மலேசியாவில் இந்திய இசை மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டேன். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகச் சிறப்பாக பாடுவார். அவருக்கு தமிழ் இசையில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளது என்பதை அறிந்து நான் மகழ்ச்சியடைந்தேன்.
இந்தியாவை உலகத்துடன் இணைக்கும் தமிழ்
100க்கும் மேற்பட்ட இந்திய ஐடி நிறுவனங்கள் மலேசியாவில் செயல்பட்டு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்தியாவின் யுபிஐ விரைவில் மலேசியாவுக்கு வர இருக்கிறது என்பதை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘இந்தியாவை அறிவோம்’ என்ற திட்டத்தில் அனைவரும் மலேசியர்களை இந்தியாவின் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து வர வேண்டும். மேலும், மலேசியாவில் விரைவில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படவுள்ளது.

மலேசியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சேவை செய்து வருகின்றனர், மேலும் தமிழ் புலம்பெயர்ந்தோர் பல நூற்றாண்டுகளாக இங்கு உள்ளனர்.
தமிழ் மொழி, உலகுக்கான இந்தியாவின் கொடை. தமிழ் பண்பாடு உலகளாவியது. தமிழ் இந்தியாவை உலகத்துடன் இணைக்கிறது.
என் அரசாங்கத்தில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இந்தியா மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை நிறுவியுள்ளது. பகிரப்பட்ட பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த ஒரு திருவள்ளுவர் மையத்தை இப்போது அமைக்கும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய குடிமக்களுக்கு 6வது தலைமுறை வரை OCI அட்டை தகுதியை இந்தியா விரிவுபடுத்தும். இந்தியாவில் படிக்க மாணவர்களுக்கு வரவிருக்கும் திருவள்ளுவர் உதவித்தொகை வழங்கப்படும்” என பேசியுள்ளார்.




