மத்திய கிழக்கிற்கு போர் கப்பல்களை அமெரிக்கா நகர்த்தி வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு தயாராகி வருகிறது.
ஈரான் போரட்டம்
ஈரானில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இந்த போராட்டத்தில் தற்போது வரை 3000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Credit : Reuters
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுங்கள் உங்களுக்கான உதவி வந்து கொண்டிருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

Credit x.com
மேலும், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார். அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
போர் கப்பல்களை நகர்த்தும் அமெரிக்கா
இந்த சூழலில், அமெரிக்கா ஈரானை தாக்க தயாராகி வரும் நிலையில் அமெரிக்கா தனது USS ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்குக்கு அருகிலுள்ள அமெரிக்க மத்திய கட்டளைக்கு (CENTCOM) நகர்த்தி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவில், குறைந்தது ஒரு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட பல போர்க்கப்பல்கள் இடம் பெற்றிருக்கும்.
இதனால் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு தயாராகி வருகிறது.
விமானம் மூலம் இந்தியர்களை மீட்க திட்டம்
போரட்டம் தீவிரமடைந்த போதே, மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியது.
இதனையடுத்து, கிடைக்கும் போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்தி ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.
ஈரானில் மாணவர்கள் உட்பட சுமார் 10,000 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக சிறப்பு விமானம் மூலம் ஈரானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு தயாராகி வருகிறது.

அதேவேளையில் இணைய முடக்கம் உள்ளிட்ட தகவல் தொடர்பு துண்டிப்பால் இந்தியர்களையே ஒருங்கிணைப்பதில் சிக்கல் நிலவுவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஈரானின் வான்வெளி மீண்டும் மூடப்பட்டால், இந்திய கடற்படை கப்பல்களை அனுப்பி மீட்கும் திட்டத்தையும் இந்தியா கையில் வைத்துள்ளது.




