போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மூடப்படும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.
போரால் LPG சிலிண்டர் தட்டுப்பாடு
ஈரான் மற்றும் இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர், மத்திய கிழக்கை தாண்டி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த போரின் ஒரு பகுதியாக ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளது. இந்த நீரிணை வழியாகவே உலகின் 20% எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இதனால், LPG உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா ஆண்டுதோறும் சுமார் 31.3 மில்லியன் டன் எல்பிஜியை பயன்படுத்துகிறது.
இதில் 87 சதவீதம் வீட்டு சமையலறை பயன்பாட்டிற்கும், மீதமுள்ளவை உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மொத்தத் தேவையில், 62 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்தியா தனது எல்பிஜி இறக்குமதியில் 85-90 சதவீதத்தை ஹார்மோஸ் நீரிணையை வழியாகவே பெற்று வந்தது.
மூடப்படும் உணவகங்கள்
LPG தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், வீட்டு பயன்பாட்டிற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ள நிலையில், வணிக நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், ஹொட்டல்கள் பாரிய சிக்கலை சந்தித்து வருகின்றன.
இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே பெரும்பாலான உணவகங்களில் இருப்பு உள்ளது எனவும், விநியோகம் தடைபட்டால், முதலில் உணவகங்கள் மெனுவை குறைக்கும், ஹோட்டல் நேரத்தை குறைக்கும், அதன் பின்னர் மூடப்படும் சூழல் ஏற்படும் என இந்தியாவில் உள்ள பல்வேறு ஹொட்டல் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் லட்சக்கணக்கானோர் உணவகங்களை நம்பியுள்ள நிலையில், பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்.
உணவகங்கள், ஹொட்டல்கள், பிற தொழில்களுக்கு எல்பிஜி விநியோகத்திற்கான பிரதிநிதித்துவங்களை மறுஆய்வு செய்ய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (OMC) மூன்று நிர்வாக இயக்குநர்கள் (ED) கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இருப்பு
மேலும், பதுக்கலை தடுக்க சிலிண்டர் முன்பதிவு சுழற்சியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களுக்கு உயர்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 20 நாட்களுக்கு வீட்டு விநியோக சிலிண்டர் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதே போல், கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு 120 டொலரை எட்டி வருகிறது.
போர் நீடித்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 – 15 வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
பெட்ரோல் விலை அதிகரித்தால், சரக்கு போக்குவரத்தின் விலை அதிகரித்து அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்வை சந்திக்கும்.
எஸ்மா(ESMA) சட்டம் அமல்
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் எஸ்மா(ESMA) சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டம் அமலானதால் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் LPG உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
LPG தயாரிக்க பயன்படும் ப்ரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
LPGயை Indian Oil Corporation, BPCL, HPCL ஆகிய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். LPG வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
சிலிண்டர்களை பதுக்கினால் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.




