இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரது தங்கை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமான நிலையில், அர்ஜூன் ஷர்மா என்னும் நபர், ஜனவரி மாதம் 2ஆம் திகதி, நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.

நிகிதாவை தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், மறுநாள், அர்ஜூன் வாழ்ந்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே நிகிதாவின் உயிரற்ற உடலைக் கண்டு பிடித்தார்கள்.
அவரது உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், நிகிதாவைக் காணவில்லை என புகாரளித்த அர்ஜூன் தலைமறைவாகிவிட்டார்.
அர்ஜூன் இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கலாம் என நம்பும் அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளார்கள்.
தங்கை கூறியுள்ள தகவல்
இந்நிலையில், நிகிதா வாழ்ந்துவந்த இடத்துக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள Ellicott City என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் நிகிதாவின் தங்கை முறை உறவினரான சரஸ்வதி என்பவர், புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, நிகிதா அர்ஜூனுக்கு 4,500 டொலர்கள் கடன் கொடுத்திருந்தாராம். அதில் 3,500 டொலர்களை மட்டும் திருப்பிக் கொடுத்த அர்ஜூன், மேலும் 1,000 டொலர்கள் கடன் கேட்டாராம். அவருக்கு மேலும் கடன் கொடுக்க மறுத்த நிகிதா, ஏற்கனவே கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அர்ஜூனிடமிருந்து பணத்தை வாங்குவதற்காக நிகிதா சென்றதாக சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஆக, கொடுத்த கடனை திருப்பிக் கேட்கச் சென்ற நிகிதாவை அர்ஜூன் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
தந்தை தெரிவித்துள்ள தகவல்
இதற்கிடையில், நிகிதாவின் தந்தையான ஆனந்த் (Anand Godishala), ஊடகங்கள் குறிப்பிடுவது போல, அர்ஜூன் தன் மகளுடைய முன்னாள் காதலர் அல்ல என்று கூறியுள்ளார்.
அர்ஜூனும் வேறு இரண்டுபேரும், நிகிதா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ள ஆனந்த், அர்ஜூன் தன் மகளுடைய அறையில் தங்கியிருந்தவர் மட்டுமே என்றும், அவர் தன் மகளுடைய முன்னாள் காதலர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது மகளுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர, மத்திய அரசும் மாநில அரசும் உதவவேண்டும் என்று அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.




