ஒடிஷா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் தீ விபத்து
ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அதிர்ச்சி சிகிச்சை பிரிவின் அவசர பிரிவில் மின்கசிவால் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட குறைந்தது 11க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் மோகன் சரண் மாஜி, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் கருணை தொகை அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “இது துரதிர்ஷ்டவசமானது மற்றும் துயரமான சம்பவம். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். மீட்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
எனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து மருத்துவமனை கட்டிடங்களையும் தீப்பிடிக்காததாக மாற்ற நான் உத்தரவுகளை பிறப்பித்தேன். 2025-26 பட்ஜெட்டில் தீ தடுப்புக்காக ரூ.320 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், 2026-27 பட்ஜெட்டில் அதற்காக ரூ.420 கோடி முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” எனதெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகையாக அறிவித்துள்ளார்.




