ஈரான் மீதான போர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் கருத்துகள் தொடர்பில் 19 இந்தியர்கள் உட்பட இதுவரை 35 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
விரைவான விசாரணை
கைதானவர்கள் அனைவரும் சமூக ஊடகளைப் பயன்படுத்தி பிராந்திய பதட்டங்களுடன் தொடர்புடைய திரிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் கருத்துகளைப் பரப்பியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் விரைவான விசாரணையை எதிர்கொள்வார்கள் என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்திய பட்டியலில், 17 இந்தியர்கள் உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 நபர்கள், வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணையை எதிர்கொள்ள உள்ளனர்.
சனிக்கிழமையன்று பெயர் அறிவிக்கப்பட்டு, கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட, இரண்டு இந்தியர்கள் உட்பட, 10 பேர்கள் மீது வேறு பிரிவுகளின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.
வெளியான அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை சட்டத்தரணி டாக்டர் ஹமாத் சைஃப் அல் ஷம்ஸ் குறிப்பிடுகையில், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் மற்றும் பொது ஸ்திரத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் புனையப்பட்ட தகவல்கள் மற்றும் திரிக்கப்பட்ட கருத்துகள் பரவுவதை எதிர்த்து டிஜிட்டல் தளங்களை கடுமையாக கண்காணிப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
100,000 திர்ஹாம் அபராதம்
கைதான முதல் 10 பேர்களில் ஐவர் இந்தியர்கள் எனவும், பாகிஸ்தான், எகிப்து, நேபாளத்தில் இருந்து தலா ஒருவர் எனவும் இருவர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் எனவும், இவர்கள் ஈரான் தாக்குதலைப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது கைதான குழுவில் ஐந்து இந்தியர்கள் உட்பட 7 பேர்கள், திருத்தப்பட்ட காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

மூன்றாவது குழுவில் ஐந்து இந்தியர்கலும் ஒரு பாகிஸ்தான் நாட்டவரும் ஈரானின் நடவடிக்கையைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு இந்தியர்கள் இதே வழக்கில் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 100,000 திர்ஹாம் அபராதமும் விதிக்கப்படும் சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




