செங்கல் சூளை தொழிலாளியின் மகன் அர்ப்பணிப்புடன் படித்து, முதல் முயற்சியிலே UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 6 ஆம் திகதி வெளியானது. இதில், நாடு முழுவதும் 958 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்ச்சி 60 பேரில் 56 பேர் அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த ராஜேஸ்வரி, அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதித்துள்ளார்.
சுப்பிரமணிய பாரதி
இதே போல், திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தை சேர்ந்த சுப்பிரமணிய பாரதி என்ற இளைஞர் தனது முதல் முயற்சியிலே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரின் தந்தை செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். வரலாற்று துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ள அவர், தனது பள்ளி படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் படித்துள்ளார்.
இது குறித்து பேசிய சுப்பிரமணிய பாரதி, நான் 18 வயதில் இருந்தே UPSC தேர்வுக்கு தயார் ஆகி வந்தேன். ஆனால் அப்போது எனக்கு தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.
நான் வேறு எந்த தனியார் மையத்திலும் பயிற்சி பெறவில்லை. நான் முதல்வன் திட்டம் தான் எனக்கு வழிகாட்டியது.
என் தந்தை மாதம் ரூ.6,500 ஊதியம் பெறுகிறார். அதை வைத்தே சிக்கனமாக என் தாய் எங்கள் குடும்பத்தை நடத்தினார். என் வீடு மிகவும் சிறியது. வீட்டில் பெற்றோர்கள் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது நான் சமையலறையில் அமர்ந்து படிப்பேன்.
ஆனால், நான் முதல்வன் திட்டத்தில் ஏசி அறையில், இணைய இணைப்புடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வறுமையான சூழலிலும் என் பெற்றோர்கள் என் UPSC முயற்சிக்கு ஆதரவளித்தனர். நான் முதல்வன் திட்டம் என் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது” என பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவரது தந்தை மாரியப்பன், “எங்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், என் மகன் அர்ப்பணிப்புடன் படித்து தேர்வுக்கு தயாரானான். மேலும் மாநில அரசின் திட்டமான நான் முதல்வன், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற அவனுக்கு உதவியது” என தெரிவித்துள்ளார்.




