ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு அபுதாபியிலிருக்கும் இந்திய தூதரகம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், தாக்குதல் தொடர்பிலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

இந்நிலையில், அபுதாபியிலிருக்கும் இந்திய தூதரகம், அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு, அமீரக அதிகாரிகளின் எச்சரிக்கை தொடர்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமீரகத்தில், சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்ப்பதற்காக, கீழ்க்கண்ட ஆலோசனைகளை பின்பற்றுமாறு இந்தியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
எச்சரிக்கை ஒலியைக் கேட்கும்போது, உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று, எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படும் வரை அங்கேயே இருங்கள்.

வெளியே சென்று வீடியோ எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கவேண்டாம். தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், சேதம், வெடித்த குண்டுகளின் பாகங்கள் முதலான எந்த விடயங்களையும் புகைப்படமோ வீடியோவோ எடுக்கவோ, அவற்றை சமூக ஊடகங்களில் பகிரவோ வேண்டாம்.
நீங்கள் தங்கியிருக்கும் பகுதியில் குண்டு ஏதாவது விழுந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுங்கள். அவற்றிற்கு அருகில் செல்லவோ, அவற்றைத் தொடவோ முயற்சிக்கவேண்டாம்.
அத்துடன், விமான நிலையம் செல்லும்போது, விமான நிலையத்துக்குள் வீடியோவோ புகைப்படமோ எடுக்கவேண்டாம்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அல்லது அங்கு வாழும் இந்தியர்கள், உள்ளூர் சட்டங்களை உறுதியாக பின்பற்றுமாறும், பாதுகாப்பு தொடர்பிலான அதிகாரிகளின் வழிகாட்டல்களின் பேரில் நடந்துகொள்ளுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.




