மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சரிந்த விக்கெட்டுகள்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் மோதின.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தில் தடுமாறியது. இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய மேற்கிந்திய தீவுகள், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ஓட்டங்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹேலே மேத்யூஸ் 28 ஓட்டங்கள் எடுத்தார். மல்கி மதரா, நிலாக்ஷி சில்வா தலா 3 விக்கெட்டுகளும், சமரி அதப்பத்து 2 விக்கெட்டுகளும், கவிஷா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இலங்கை அணி வெற்றி
பின்னர் ஆடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.

மேற்கிந்திய தீவுகளின் தரப்பில் அஃபி பிளெட்சர், கியானா ஜோசப் தலா 2 விக்கெட்டுகளும், ஹேலே மேத்யூஸ் மற்றும் கரிஷ்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.




