இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை வீசிய நிலையில், லெபனானிலும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல்
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அயத்துல்லா அலிரேசா அராஃபி ஈரான் நாட்டின் இடைக்கால உச்ச தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயதுல்லா அலி காமெனியின் மறைவிற்கு பழி வாங்குவோம் என ஈரான் அறிவித்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
அலி காமெனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரானின் ஆதரவு அமைப்பான லெபனானை தளமாக கொண்ட ஹிஸ்புல்லா ராக்கெட் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேலை குறிவைத்து ஏவியது.
இதற்கு பதிலடியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் சுமார் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனானின் 50க்கும் மேற்பட்ட பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இதனால் அச்சமடைந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.
இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லாவின் தாக்குதல் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனான் ஜனாதிபதி Joseph Aoun கண்டனம் தெரிவித்துள்ளார்.




