மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து உடனுக்குடன் பணிகளை செய்வதில் முக்கிய பங்குவகிப்பது மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியாகும்.
அரசின் திட்டங்களை கீழ் மட்டத்தில் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்த அமைப்புகளின் பங்கு முக்கியமானது.
உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி என இருவகையாகப் பிரிக்கலாம்.

இதில் தான் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மாநகராட்சி என்பது பெருநகர் பகுதியினைக் கொண்ட ஒரு உள்ளாட்சி அமைப்பாகும்.
பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன.
அந்தவகையில், இந்தியாவிலேயே சென்னைதான் முதல் மாநகராட்சியாக தோன்றியது.

இந்தியாவின் முதல் மாநகராட்சியான சென்னை 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது.
அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தொகை மற்றும் வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.

2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகை 48.45 % ஆகும்.
தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 55 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.




