ஜார்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் திடீரென உயிரிழந்துள்ள நிலையில் மரணம் குறித்த காரணம் வெளியாகவில்லை.
சம்பாய் சோரனனின் பேரன்
ஜார்கண்ட் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டில் 5 மாதங்கள் முதல்வராக இருந்தவர் சம்பாய் சோரன்(champai soren).

இவரது பேரன் 22 வயதான வீர் சோரன்(veer soren), தனது 2 நண்பர்களுடன் பிப்ரவரி 22 அன்று இமாச்சலபிரதேசத்தின் சிம்லாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பிப்ரவரி 24 அன்று, அவரின் நண்பர்கள் சோலாங் மற்றும் சேத்தன் பகுதிகளைப் பார்வையிட சென்ற போது அவர் உடன் செல்லவில்லை.

அவரது நண்பர்கள் மதியம் அறைக்கு திரும்பிய போது, வீர் தூங்கி கொண்டு இருந்துள்ளார். அவரை எழுப்பிய போது தனக்கு கடுமையான தலைவலி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், ஆன்லைன் மூலம் மருந்து ஆர்டர் செய்து அவருக்கு கொடுத்துள்ளார்கள். அதன் பிறகு வீர் மீண்டும் தூங்கிவிட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
2 மணியளவில் அவரது அறையில் இருந்து ஒரு பெரிய சத்தம் கேட்ட நண்பர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீரர் தரையில் கிடந்துள்ளார்.
நண்பர்கள் உடனடியாக அவரை மணாலி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே அவரது வாயிலிருந்து நுரை வடிந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் CPR மூலம் வீரை உயிர்ப்பிக்க முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்காத நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
சம்பாய் சோரன் தனது பேரனின் மரணத்தை எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது குடும்பத்தினர் தற்போது மணாலிக்கு விரைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரனின் உயிரிழப்புக்கு காரணம் உடனடியாகத் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




