உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானிய அரசு விதித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட உக்ரைனுக்கான ஆதரவு
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 4ம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், பிரித்தானியா அரசு உக்ரைனுக்கான ஆதரவு நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மாஸ்கோ மீதான பொருளாதார தடைகள் மற்றும் உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் என இரு தரப்பு நடவடிக்கைகளையும் பிரித்தானியா கையில் எடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்(FCDO) வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கான விரிவான உதவித் திட்டம்
ரஷ்யாவின் போர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் உள்கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோக கட்டமைப்பை சீரமைக்க 20 மில்லியன் பவுண்ட் பிரித்தானிய அரசு ஒதுக்கியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க கூடுதலாக 5.7 மில்லியன் பவுண்ட் ஒதுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய இராணுவ வீரர்கள் மற்றும் விமானிகளுக்கான வான்வழித் பறக்கும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ஹெலிகாப்டர்களை இயக்கும் சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ரஷ்யா மீதான பொருளாதார தடை
போர் நடவடிக்கைகளை தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், உலகளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியாகவும், ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் 297 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானிய புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் சீன நிறுவனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




