ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஏர் ஆம்புலன்ஸ் விபத்து
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் திங்கட்கிழமை மாலை நோயாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக ராஞ்சியில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்ட போது துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியது.
ராஞ்சி விமான நிலையத்தில் மாலை 7.11 மணிக்கு புறப்பட்ட ரெட்பேர்ட் ஏர்வேஸ் புறப்பட்ட 20 நிமிடத்திலேயே(7.30 மணியளவில்) சிமாரியாவின் பரியாட்டு பஞ்சாயத்து பகுதியை சுற்றியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில் ஏர் ஆம்புலன்ஸில் பயணித்த 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் விவரம்
விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 7 உடல்களும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, விமானிகள்: கேப்டன் விவேக் விகாஸ் பகத் மற்றும் கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், மருத்துவக் குழுவினர் டாக்டர் விகாஸ் குமார், சச்சின் குமார், நோயாளி: சஞ்சய் குமார், உறவினர்கள்: அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார். தீக்காயங்களால் அவதியடைந்து வந்த நோயாளி சஞ்சய் குமார் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
சாலை வழியாக அழைத்து சென்றால் சஞ்சய் குமார் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், பெரும் முயற்சிக்கு பிறகு ஏர் ஆம்புலன்ஸ் வசதியை உறவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




