அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் விதித்த புதிய உலகளாவிய வரி உத்தரவின் பின்னர், இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட வரி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம், ட்ரம்ப் முன்பு பயன்படுத்திய சட்டத்தின் கீழ் திடீர் வரி விதிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. இதனால் அவரது முக்கிய பொருளாதார கொள்கைக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
1974 -ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ஐ பயன்படுத்தி, 150 நாட்களுக்கு 15 சதவீதம் வரை தற்காலிக வரி விதிக்கும் அதிகாரத்தை ட்ரம்ப் பெற்றுள்ளார்.
இதன் அடிப்படையில், பிப்ரவரி 24 முதல் 150 நாட்கள் வரை புதிய 10 சதவீத வரி அமுலுக்கு வரும்.

மருந்துகள் போன்ற சில துறைகள் மற்றும் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்கள் விலக்கு பெறுகின்றன.
இந்தியா-அமெரிக்கா இடையே சமீபத்தில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட 25 சதவீத தண்டனை வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனால் புதிய உத்தரவின் மூலம், இந்தியாவைச் சேர்த்து அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரி 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால், முன்பு இந்தியா செலுத்திய 3.5 சதவீத ‘Most Favoured Nation’ (MFN) நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருந்தது. ஆனால் ட்ரம்ப் உடனடியாக புதிய உத்தரவை கையெழுத்திட்டு, 10 சதவீதம் வரி கட்டாயமாக்கியுள்ளார்.
“இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்கிறது, ஆனால் புதிய முறையில் செயல்படும்,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு வணிக உலகில் நிச்சயத்தன்மையை ஏற்படுத்தியதாக அமெரிக்க வணிக அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதேசமயம், ஏற்கனவே செலுத்திய வரிகளை திருப்பி வழங்குவது குறித்து சட்டப் பிரச்சினைகள் நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.




