வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்க உள்ளார்.
வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மான்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், 18 மாதங்கள் முகமது யூனுஸ் தலைமையில், இடைக்கால அரசு ஆட்சி நடத்தியது.
இதனையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான வங்கதேசத்தின் 13வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதால், வங்காளதேச தேசியவாதக் கட்சி(BNP) மற்றும் ஜமாத் ஏ இஸ்லாமி காட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால் 299 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
அதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், 213 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று தாரிக் ரஹ்மானின் BNP கட்சியை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

BNP தலைவர் தாரிக் ரஹ்மான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
விரைவில வங்கதேச பிரதமராக பொறுப்பேற்க உள்ள தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா பிரதமர் மோடி, வங்காளதேசத்திற்கான அமெரிக்க தூதர் பிரெண்ட் டி கிறிஸ்டென்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
யார் இந்த தாரிக் ரஹ்மான்?
வங்கதேசத்தின் 6வது ஜனாதிபதியான ஜியாவுர் ரஹ்மான் மற்றும் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் ஆவார்.
ராணுவ தலைமை தளபதியாக இருந்த ஜியாவுர் ரஹ்மான், 1975 ஆட்சி கவிழ்ப்பின் போது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

அதன் பின்னர், ஜியாவுர் ரஹ்மான் வங்காளதேச தேசியவாதக் கட்சியை (BNP) தொடங்கினார். 1981 மே 30 ஆம் திகதி அதிகாலை, இராணுவ அதிகாரிகள் குழுவால் படுகொலை செய்யப்பட்டார்.
தனது கணவர் கொல்லப்பட்ட பிறகு BNP கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற கலிதா, 8 ஆண்டு ராணுவ ஆட்சியில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு தேர்தலில் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.

அவரின் ஆட்சி காலத்தில் தாரிக் ரஹ்மானே முக்கிய பொறுப்புகளை எடுத்து நிழல் பிரதமராக வலம் வந்தார். இதனால், அவருக்கு டார்க் பிரின்ஸ் என்ற பெயரும் இருந்தது.
2007 ஆம் ஆண்டில் ராணுவ ஆதரவுடன் பொறுப்பேற்ற இடைக்கால அரசு, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மானை கைது செய்து சிறையில் அடைத்தது.
17 மாதங்கள் சிறையில் இருந்த அவர், சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன் பெற்று லண்டன் சென்ற அவர் அங்கே தஞ்சமடைந்தார்.
2025 ஆம் ஆண்டு டிசம்பரில் அவரது தாய் கலீதா ஜியா உயிரிழந்த போது வங்கதேசத்திற்கு திரும்பிய அவர், அதன் பின்னர் BNP கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

வங்கதேசத்தை ட்ரில்லியன் டொலர் பொருளாதாரமாக மாற்றுவேன், வேலைவாய்ப்பை உருவாக்குவேன்,இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவேன் என பல்வேறு தேர்தலை வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலை சந்தித்த அவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார்.
இந்தியா குறித்து பேசியது என்ன?
ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் இந்தியாவுடன் சீராக இருந்த வங்கதேச உறவு, அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்ற பின்னர் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களை கருதி இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, T20 உலக கிண்ண தொடரை புறக்கணித்துள்ளது.

இந்தியாவுடன் “பிரச்சினைகள்” இருப்பதை ஒப்புக்கொண்ட ரஹ்மான், “பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல் கொண்ட உறவை” மட்டுமேதான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா புகலிடம் அளித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான உறவை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்ற கேள்விக்கு, “அது அவர்களைப் பொறுத்தது” என்று ரஹ்மான் பதிலளித்துள்ளார்.




