இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் படகுகளை முடக்க கடற்படை நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் மசோதாவிற்கு இத்தாலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடுமையான அச்சுறுத்தல்
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவியேற்றதிலிருந்து, பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்,

மேலும் படகு மூலமாக மக்கள் குடியேறுவதைத் தடுக்கும் முயற்சியில், மனித கடத்தல்காரர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இத்தாலி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் கடுமையான அணுகுமுறைக்கான அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றிய புகலிட விதிகளில் மாற்றங்களை இந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரித்ததை அடுத்து இத்தாலிய நாடாளுமன்றத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் வரைவின் கீழ், பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசாங்கம் ஆறு மாதங்கள் வரை படகுகள் அதன் பிராந்திய நீர்நிலைகளுக்குள் நுழைவதைத் தடை செய்யலாம்.
இதை மீறுபவர்களுக்கு 50,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும், மேலும் தொடர்ந்து மீறப்பட்டால் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும். உண்மையில் இது தொண்டு நிறுவனங்களின் மீட்புப் படகுகளை இலக்காகக் கொண்ட ஒரு நடவடிக்கை என்றே கூறுகின்றனர்.
மேலும், மீட்புப் படகுகளை இயக்குவதன் மூலம் மனிதாபிமான குழுக்கள் புலம்பெயர்ந்தோர் கடலில் இறங்குவதற்கான ஊக்கமாக செயல்படுகின்றன என்று மெலோனியின் கூட்டணி பலமுறை வாதிட்டுள்ளது.

விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்
ஆனால், இத்தாலியின் மைய-இடது எதிர்க்கட்சி இந்த மசோதாவை விமர்சித்துள்ளது, இந்த மசோதாவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் தேவை.
2015 ஆம் ஆண்டு முதல் மில்லியன் கணக்கான அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ளனர், இது புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்வைத் தூண்ட உதவியது மற்றும் பல நாடுகள் தங்கள் அரசாங்கங்களின் கொள்கைகளை இறுக்க காரணமானது.

செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட விதிகளின் கீழ், அந்த நபர் பாதுகாப்பானதாகக் கருதும் நாட்டில் பாதுகாப்பு பெற்றிருந்தால், உறுப்பு நாடுகள் புகலிடம் கோரும் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஐரோப்பிய நாடாளுமன்றம், புகலிடம் கோரத் தவறியவர்களைத் திருப்பி அனுப்பக்கூடிய நாடுகளின் பட்டியலையும் அங்கீகரித்துள்ளது.




