தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காக EPFO அமைப்பின் மூலம் PF கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த PF கணக்கில் ஊழியர் சார்பாகவும் அவர் வேலை பார்க்கும் நிறுவனம் சார்பாகவும் வரவு வைக்கப்படும் பணத்திற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது.
தொழிலாளர்கள் தங்களுடைய PF கணக்கில் உள்ள பணத்தை தற்போது வங்கிகள் மூலம் மட்டுமே எடுத்து வருகின்றனர்.

இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், தற்போது UPI செயலி மூலம் தொழிலாளர்களே நேரடியாக தங்களுடைய வங்கிக் கணக்கில் PF பணத்தை மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த செயலி மூலம், தேவையான அளவு பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை PF கணக்கில் வைத்திருக்க முடியும்.

இதற்காக தனியான செயலியை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும், அந்த செயலி வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த செயலியில் PF இருப்புத் தொகை, எவ்வளவு தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.




