இந்தியா உடனான மோதலுக்குப் பிறகு, சீனா அணு ஆயுத சோதனை நடத்திய அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம்
ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான கடந்த 2010 ஆம் ஆண்டு நியூ ஸ்டார்ட் (New START Tready) என்ற அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளும், 1550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டில் காலவாதியானதையடுத்து, ஒரு முறை 5 ஆண்டுக்கு நீடிக்கலாம் என்ற விதிப்படி நீடிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி ஒப்பந்தம் காலாவதியாகியுள்ள நிலையில், புதிய ஒப்பந்த்தை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது.
அணு ஆயுத வரம்பை அதிகரித்து ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் சீனாவையும் இணைக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதில் இணைய சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
அணு ஆயுத சோதனை நடத்திய சீனா?
இந்நிலையில், ஜெனீவாவில் ஐ.நா ஆதரவுடன் நடைபெற்ற ஆயுதக் குறைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் தாமஸ் டினானோ, சீனா அணு ஆயுத சோதனையில் ரகசியமாக ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “சீனா அணு வெடிக்கும் சோதனைகளை நடத்தியது அமெரிக்க அரசாங்கத்திற்குத் தெரியும் என்பதை நான் வெளிப்படுத்த முடியும். சீனா ஜூன் 22, 2020 அன்று அணுசக்தி சோதனையை நடத்தியது.
இந்த சோதனைகள், சோதனை தடை உறுதிமொழிகளை மீறுவதாக அமையும் என்பதால், அணு வெடிப்புகளை மறைப்பதன் மூலம் சோதனையை மறைக்க சீன இராணுவம் முயன்றது” என பேசினார்.
மேலும், சீனா தனது செயல்பாடுகளை உலகத்திலிருந்து மறைக்க, நில அதிர்வு கண்காணிப்பின் செயல்திறனைக் குறைப்பதற்கான ஒரு முறையான துண்டிப்பை பயன்படுத்துகிறது என குற்றஞ்சாட்டினார்.

“சீன சோதனை நடத்தியதாக கூறப்படும் நேரத்தில், கண்காணிப்பு அமைப்பு அணு ஆயுத சோதனை வெடிப்பின் பண்புகளுடன் ஒத்துப்போகும் எந்த நிகழ்வையும் கண்டறியவில்லை” என விரிவான அணுசக்தி-சோதனை-தடை ஒப்பந்த அமைப்பின் நிர்வாகச் செயலாளர் ராபர்ட் ஃபிலாய்ட் கூறியுள்ளார்.
சீனா மறுப்பு
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அணு ஆயுதக் குறைப்புக்கான சீனாவின் தூதர் ஷென் ஜியான், “இந்த தவறான கதையை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம், அமெரிக்காவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்.

உண்மையில், அணு ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையில் அமெரிக்காவின் தொடர்ச்சியான எதிர்மறை நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
சீனா எப்போதும் அணுசக்தி சோதனை மீதான தடைக்கான உறுதிப்பாட்டை மதித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 -21 ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா படைகளுக்கு இடையே மோதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




