நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு ஜனாதிபதி ட்ரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்கு நான் நன்றி கூறுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அபராத வரி
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25 சதவீதம் அபராத வரியை, ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அமெரிக்கா, இந்தியா இருநாடுகளின் வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வரியை குறைத்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நன்றி
இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், “இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஒரு நல்ல செய்தி! நமது இரு பாரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு ஜனாதிபதி ட்ரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த கூட்டமைப்பு நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், MSMEகள், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் இது ‘மேக் இன் இந்தியா’வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.





