இந்தியா- அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரஸ்பர வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராதமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதித்தார்.

தற்போது இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக படிப்படியாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இந்தியா மீதான வரியை டிரம்ப் 18% ஆக குறைத்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியர்களுக்கு 30 ட்ரில்லியன் டொலர் அமெரிக்கா பொருளாதார சந்தை திறக்கப்பட உள்ளது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையில் இந்தியா மற்றும் அமெரிக்க பொருட்களுக்கு வரி குறைக்கப்பட உள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பொருட்களுக்கு வரி குறையும்?
ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள், கரிம இரசாயனங்கள், வீட்டு அலங்காரம், கைவினைப் பொருட்கள் மற்றும் சில இயந்திரங்கள் ஆகிய இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா பரஸ்பர 18% வரி விதிக்கும்.

அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்கள், உலர் தானியங்கள், கால்நடை தீவனத்துக்கான சிவப்பு சோளம், கொட்டை வகைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயா எண்ணெய், ஒயின், மதுபானங்கள் உட்பட அமெரிக்காவின் பல விவசாய மற்றும் உணவு பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைக்கும் அல்லது நீக்கும்.
இந்த இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொதுவான மருந்துகள், வைரங்கள் மற்றும் நகைகள், விமான பாகங்கள் உள்ளிட்ட பல இந்திய தயாரிப்புகளுக்கு வரிகளை முற்றிலுமாக நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொருட்களுக்கான வர்த்தகத் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், அமெரிக்கத் தரநிலைகள் மற்றும் சோதனைத் தேவைகளை ஏற்றுக்கொள்வது குறித்து 6 மாதங்களுக்குள் இந்தியா முடிவெடுக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து எரிசக்தி பொருட்கள், விமானங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் கோக்கிங் நிலக்கரி ஆகியவற்றை 500 பில்லியன் டொலர் மதிப்பிற்கு கொள்முதல் செய்ய இந்தியாதிட்டமிட்டுள்ளது.
தரவு மையங்களில் (Data centers) பயன்படுத்தப்படும் கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPUs) உள்ளிட்ட தொழில்நுட்பப் பொருட்களின் வர்த்தகத்தை 2 நாடுகளும் கணிசமாக அதிகரிக்கும்.
டிஜிட்டல் வர்த்தகத்தில் உள்ள பாரபட்சமான நடைமுறைகளை நீக்கவும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) ஒரு பகுதியாக வலுவான டிஜிட்டல் வர்த்தக விதிகளை உருவாக்கவும் 2 நாடுகளும் முன்வந்துள்ளன.




