இந்திய அரசு, தங்கம் கலந்த பிளாட்டினம் பொருட்கள் வழியாக நடைபெறும் சட்டவிரோத தங்க இறக்குமதியைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட அறிவிப்பின்படி, ITC HS code 71141920-க்கு உட்பட்ட பிளாட்டினம் பொருட்களின் இறக்குமதி கொள்கை, இதுவரை “Free” என இருந்ததை “Restricted” என மாற்றியுள்ளது.
இதன் மூலம், பிளாட்டினம் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அவசியமாகிறது.
முன்னதாக, தங்கத்தை பிளாட்டினம் அலாய் (Platinum Alloy) என்ற பெயரில் கொண்டு வர சட்ட ஓட்டை பயன்படுத்தப்பட்டது. அதனை அரசு கடந்த ஆண்டு கட்டுப்படுத்தியது.

ஆனால் தற்போது, பிளாட்டினம் பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கலந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த நிதியாண்டில் (FY25) இந்தியாவின் பிளாட்டினம் மற்றும் விலைமதிப்புள்ள உலோகப் பொருட்கள் இறக்குமதி 9.75 மில்லியன் அமெரிக்க டொலராக இருமடங்கு உயர்ந்துள்ளது. இதுவே அரசை புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கத் தூண்டியுள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிளாட்டினம் பொருட்கள் கண்காட்சி, ஏற்றுமதி ஊக்கப் பயணங்கள், பழுது பார்க்க அனுப்பப்பட்டவை போன்ற காரணங்களுக்காக மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அரசு 99 சதவீதத்திற்கும் குறைவான தூய்மையுடன் பிளாட்டினம் அலாய் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. காரணம், அதில் தங்கம் கலந்திருந்ததால், தங்கம்-பிளாட்டினம் சுங்க வித்தியாசத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வரப்பட்டதாக கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கை, தங்கத்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யக்கூடிய சட்டத்தில் இருக்கும் ஒட்டடையை பயன்படுத்துவதை தடுப்பதற்கான முக்கியமான முயற்சி என வணிக வட்டாரங்கள் கருதுகின்றன.




