14 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் இயக்கிய டாக்கா-கராச்சி BG341 என்ற தொடக்க விமானம், டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இரவு 11.03 மணிக்கு தரையிறங்கியது.
விமானம் வந்தவுடன், பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரிகள் பாரம்பரிய வாட்டர் கானன் சல்யூட் வழங்கினர்.
இந்த நிகழ்வில், சிந்து மாநில ஆளுநர் காம்ரான் டெசோரி கலந்து கொண்டு, “இரு நாடுகளின் ஒத்துழைப்பு விமான சேவையைத் தாண்டி பல துறைகளில் விரிவடையும்” எனக் கூறினார்.

டாக்காவில் நடைபெற்ற இவ்விழாவில், வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆலோசகர் ஷேக் பஷீருத்தீன், “இந்த புதிய சேவை, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும், சுற்றுலாவை ஊக்குவிக்கும், மேலும் விமான கட்டணங்களை குறைத்து பயணத்தை எளிதாக்கும்” என தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவை 2012 முதல் நிறுத்தப்பட்டிருந்ததால், பயணிகள் துபாய், தோஹா போன்ற வளைகுடா நகரங்கள் வழியாக பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
இப்போது, வாரத்தில் இரண்டு முறை இயக்கப்படும் இந்த நேரடி விமானங்கள், இரு நாடுகளிலும் வர்த்தகம், கல்வி, கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




