உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2026-இல் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைய வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 11 சதவீதம் வீழ்ச்சி கண்ட நிலையில், இவ்வாண்டும் நகை விற்பனை சரிவு காரணமாக மொத்த தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கையில், 2026-இல் தங்கத்தின் தேவை 600-700 மெட்ரிக் டன் அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025-இல் 710.9 டன் மட்டுமே தேவைப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாக இருந்தது.

WGC இந்திய பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின், “தங்கத்தின் விலை வேகமாக உயர்வதால் நகை வாங்குபவர்கள் பின்வாங்கியுள்ளனர். ஆனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதி அதிகம் வாங்குகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
2025-இல் தங்க ETF-களில் முதலீடு 283 சதவீதம் அதிகரித்து ரூ.4.29 லட்சம் கோடி என்ற சாதனை அளவை எட்டியது.
அதேசமயம், 2025-இல் நகையின் தேவை 24 சதவீதம் குறைந்து 430.5 டன்னாக இருந்தது. இது கடந்த 30 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.
முதலீட்டு தேவை 17 சதவீதம் உயர்ந்து 280.4 டன் எட்டியது. மொத்த தங்க நுகர்வில் முதலீட்டு பங்கு 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. பங்குச் சந்தை பலவீனமடைந்ததால், முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகம் விரும்புகின்றனர்.
“நகை விற்பனை குறைந்தாலும், தங்கம் சிறந்த முதலீடாக இந்தியர்களின் விருப்பத்தில் நீடிக்கும். விலை உயர்வு தொடர்ந்தால், நகை சந்தை மேலும் பாதிக்கப்படும்” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.




