வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் எண்ட் டு எண்ட் உரையாடலின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் மீது நீதிமன்ற வழக்கு
மெட்டா(Meta) நிறுவனத்தினால் வாட்ஸ்அப் பயனர்களின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்(End to End Encryption) செய்யப்பட்ட உரையாடல்களை பார்க்க முடியும் என குற்றம்சாட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் உரையாடல் பாதுகாப்பு குறித்த வழக்கு போடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்களால் போடப்பட்ட இந்த வழக்கு கடந்த ஜனவரி 23ம் திகதி சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், வாட்ஸ் அப்பில் உள்ள பாதுகாப்பு செயல்முறைகள் வெறும் கண்துடைப்பு என்றும், பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை மெட்டா ஊழியர்களால் பார்வையிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நீக்கப்பட்ட செய்திகள் உட்பட அனைத்தையும் மெட்டா ஊழியர்களால் உடனுக்கு உடன் பார்வையிட முடியும் என்று அதில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் மறுப்பு
இந்நிலையில் மெட்டா நிறுவனம் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.
மேலும் இவை அபத்தமானவை மற்றும் அடிப்படையற்றவை என கூறியுள்ளதோடு, வாட்ஸ்அப் பாதுகாப்பு வாக்குறுதி அளித்தபடி பாதுகாப்பானது என்றும், பயனர்களிடம் உள்ள உரையாடல் திறப்பு சாவி(Encryption Key) அவர்களின் சாதனங்களில் மட்டுமே சேமிக்கப்படும் என்றும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது.
எலான் மஸ்க் விமர்சனம்

இந்த விவகாரம் குறித்து எலான் மஸ்க் தன்னுடைய X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார், அதில் வாட்ஸ்அப் பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
என்க்ரிப்ட் செய்யப்பட்ட செயலியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய எலான் மஸ்க், xAI நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட X chat செயலியை பயன்படுத்துமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.




