ஹவுரா–காமாக்யா வழித்தடத்தில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயில் இரவு நேரப் பயண வசதியுடன் மட்டுமல்லாமல், சிறப்பான உணவு பட்டியலும் கவனம் பெற்றுள்ளது.
இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சுமார் 1,000 கி.மீ. தூரம் பயணம் செய்கிறது.
இதில் 16 ஸ்லீப்பர் பெட்டிகள், 823 பயணிகளுக்கான வசதி, தானியங்கி கதவுகள், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள், Kavach தொழில்நுட்பம் மற்றும் மணிக்கு 130 கி.மீ. வேகம் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த சேவை கிழக்கு இந்தியாவையும், வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் வேகமான மற்றும் நம்பகமான போக்குவரத்தாக அமைகிறது.
இந்த ரயிலின் உணவுப் பட்டியல், வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களின் பாரம்பரிய சமையலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
IRCTC உடன் இணைந்து, குவஹாத்தியில் உள்ள மேஃபேர் ஸ்பிரிங் வேலி ரிசார்ட் இந்த மெனுவை தயாரித்துள்ளது.
பருவகால காய்கறிகள், சைவ உணவுகள் மற்றும் குறைந்த காரம் கொண்ட மென்மையான உணவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இதில் பசந்தி புலாவ், சோளர் பருப்பு, மூங் தால், சனார் உணவுகள் போன்ற பாரம்பரிய வங்காள உணவுகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், ஜோஹா ரைஸ், மசூர் தால், பருவகால காய்கறி பஜ்ஜிகள் போன்ற அசாம் உணவுகளும் வழங்கப்படுகின்றன.
இனிப்புகளில் சந்தேஷ், ரசகுல்லா, நரிகோல் பர்பி போன்ற பாரம்பரிய இனிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இரவு பயணத்திற்கு ஏற்ற வகையில், அனைத்து உணவுகளும் மென்மையான சுவையுடன், காரம் குறைவாக தயாரிக்கப்படுகின்றன.




