பெங்களூருவில் நடந்த கொள்ளைச் சம்பவம் ஒன்றில் மூன்று பேர் பொலிசாரிடம் சிக்கினார்கள்.

கொள்ளையர்களில் ஒரு பெண்ணும் இருப்பதாக எண்ணி பொலிசார் அவர்களைத் தேடிவந்த நிலையில், அவர்கள் சிக்கியபோது, எதிர்பாராத சில உண்மைகள் தெரியவந்தன.
ஆண் போல வேடமிட்டு…
கடந்த வாரம், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் வாழும் சங்கமேஷ் என்னும் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளும், 15,000 ரூபாய் ரொக்கமும் திருட்டுப்போனது.
திருடர்கள், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றிருந்தார்கள்.
பொலிசார் CCTV காட்சிகளை ஆராய்ந்தபோது, ஒரு பெண்ணும் இரண்டு பையன்களும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் செல்லும் காட்சிகள் சிக்கின.
அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை பிடித்து விசாரித்தபோது, அவரது உறவினர்கள் அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியது தெரியவந்தது.
விசாரணையில், எதிர்பாராத சில உண்மைகள் வெளியாகின. இரண்டு பையன்களுடன் ஒரு பெண்ணும் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பொலிசார் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், கொள்ளைச் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதே ரேஷ்மா (42) என்னும் பெண்தான் என்பது தெரியவந்தது.
The Indian Express
அதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால், அவருடன் திருடச் சென்றது பையன்கள் அல்ல, இரண்டு பதின்ம வயதுப் பெண்கள்!
ஆம், அந்தப் பெண்களை ஆண்கள் போல உடை உடுக்கச் செய்து தன்னுடன் திருட அழைத்துச் சென்றுள்ளார்.
பார்ப்பவர்களுக்கு ஒரு பெண்மணியும் இரண்டு சிறுபையன்களும் செல்வது போல் தெரிந்தால், அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாது என்பதற்காகவே இப்படி ஆண் வேடமிட்டுள்ளார்கள் அந்தப் பெண்கள்.
அவர்கள் எண்ணியதுபோலவே, பட்டப்பகலில் திருடிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்கள் மீது யாருக்கும் சந்தேகமும் ஏற்படவில்லை.
ஆடம்பரமாக வாழ்வதற்காக திருட்டில் ஈடுபட்டதாக ரேஷ்மா கூறியுள்ள நிலையில், அவர்களிடமிருந்து ஆறு கிராம் தங்க நகைகளும், 60 கிராம் வெள்ளி நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. விசாரணை தொடர்கிறது.




