இந்தியாவின் CRPF ஆண்கள் படையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை சிம்ரன் பாலா பெற்றுள்ளார்.
சிம்ரன் பாலாவுக்கு கிடைத்த பெருமை
ஜனவரி 26ம் திகதி இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், குடியரசு தின அணிவகுப்பில், இந்தியாவின் மிக முக்கியமான ஆயுதப் படையான சிஆர்பிஎஃப்(CRPF) ஆண்கள் படையை 26 வயது உதவி கமாண்டன்ட் சிம்ரன் பாலா வழி நடத்த உள்ளார்.
சிம்ரன் பாலா கிட்டத்தட்ட 140 வீரர்கள் கொண்ட CRPF படையை குடியரசு தின விழாவில் வழி நடத்த உள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பில் CRPF படையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இதன் மூலம் சிம்ரன் பால பெறவுள்ளார்.
140 வீரர்களை வழிநடத்த கடுமையான உழைப்பும் பயிற்சியும் தேவைப்படும் நிலையில், அணியின் ஒற்றுமை மற்றும் துல்லிய செயல்பாட்டில் கவனம் செலுத்தினோம், தேசிய அளவில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை நினைத்து கெளரவம் அடைவதாக சிம்ரன் பால தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடின உழைப்பு எப்போதும் பலன் உண்டு என்றும் அதற்கு சாட்சி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த சிம்ரன் பாலா?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா என்ற எல்லை கிராமத்தை சேர்ந்தவர் சிம்ரன் பாலா.
இவருக்கு சிறு வயது முதலே இந்தியாவின் சீருடை பணிகள் மீது ஆர்வம் இருந்த நிலையில், தன்னுடைய கடின உழைப்பு மற்றும் ஆசையின் காரணமாக UPSC CAPF தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று அசத்தினார்.
தேசிய அளவில் தரவரிசையில் 100 இடங்களுக்குள் பிடித்து அசத்தியதுடன், CRPF படையின் குரூப் ஏ அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
மேலும் சிம்ரன் பாலா இடதுசாரி தீவிரம் காணப்படும் சவால் மற்றும் அச்சுறுத்தல்கள் நிறைந்த சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பணியாற்றி வருகிறார்.
அவருடன் பணிபுரியும் சக அதிகாரிகள் அவரை நிதானமான மற்றும் சிறந்த முடிவெடுக்கும் திறன் கொண்ட அதிகாரி என்று பாராட்டி வருகிறார்கள்.




