பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரித்தானிய குடிமகனான கந்தையா ராஜகோபால் (Kandiah Rajagopal), தனது போர்டிங் பாஸை இலங்கை நாட்டவருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த போர்டிங் பாஸை பயன்படுத்தி, சருசன் குனசேகரன் (Sharusan Kunasekaran) என்ற இலங்கை நாட்டவர் லண்டன் நோக்கி சட்டவிரோதமாக பயணம் செய்துள்ளார்.
ராஜகோபால், ஜனவரி 18 காலை 7.20 மணிக்கு Virgin Atlantic VS-347 விமானத்தில் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் விமான நிலையத்தின் Security Hold Area-வில் இருந்தபோது CISF அதிகாரிகள் சந்தேகத்துடன் அவரை தடுத்து விசாரித்தனர். பின்னர், அவர் போர்டிங் பாஸை மற்றொருவருக்கு வழங்கியிருப்பது தெரியவந்தது.
விசாரணையில், குனசேகரன், அதே நாளில் காலை 10.20 மணிக்கு IndiGo 6E-1009 விமானத்தில் சிங்கப்பூர் செல்ல இருந்தார். ஆனால், அவர் ராஜகோபாலின் போர்டிங் பாஸை பயன்படுத்தி லண்டன் சென்றது உறுதி செய்யப்பட்டது.
இதனால், லண்டனில் அவர் கைது செய்யப்பட்டு, விரைவில் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், மனிதக் கடத்தல் அல்லது வேலை மோசடி தொடர்பான பெரிய சதியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.




