ஸ்பெயினில் இரண்டு நாட்களில் மற்றோரு ரயில் விபத்து நடந்துள்ளது.
ஸ்பெயினின் கத்தலோனியா பகுதியில், பார்சிலோனாவுக்கு அருகே பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த ரயிலை இயக்கிய சாரதி உயிரிழந்தார்.
மேலும், குறைந்தது 37 பயணிகள் காயமடைந்துள்ளனர், இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து, Gelida மற்றும் Sant Sadurní இடையே Rodalies பயணிகள் ரயில் பயணித்தபோது ஏற்பட்டது.

கடும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில், சுவர் இடிந்து ரயில் பாதையில் விழுந்தது. அதே நேரத்தில் ரயில் சென்றதால், முதலில் ஓட்டுநர் அறை தாக்கப்பட்டு, பின்னர் முதல் பெட்டியில் பயணித்த பெரும்பாலானோர் காயமடைந்தனர்.
கத்தலோனியா தீயணைப்பு துறை, “அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது.
சிலரை மீட்க ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுத்ததாகவும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள Moisès Broggi, Bellvitge, Vilafranca மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெறிவித்தனர்.
இந்த விபத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கு ஸ்பெயினில் நடந்த அதிவேக ரயில் மோதல் சம்பவத்துக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது.
அந்த விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். இதனால், ஸ்பெயின் ரயில் சாரதிகள் சங்கமான Semaf வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
கடுமையான மழை மற்றும் புயல் காரணமாக, கத்தலோனியாவின் Rodalies ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுமார் 4 லட்சம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என El País பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த தொடர் விபத்துகள், ஸ்பெயின் ரயில்வே பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.




