லண்டனில் உள்ள ஒரு பிரபல ஆரம்பப் பாடசாலையில் படித்து வந்த 8 வயது இந்து மாணவன், நெற்றியில் திலகம் அணிந்ததற்காக பாடசாலை நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாணவனின் பெற்றோர், குழந்தை தினமும் வழிபாட்டிற்கு பின் திலகம் அணிந்து பாடசாலைக்கு சென்றதாகவும், ஆனால் ஆசிரியர்கள் அதை “பாடசாலை விதிமுறைக்கு முரணானது” எனக் கூறி தடை விதித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலர் இதை மத சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை எனக் கண்டித்து, “பிரித்தானியா போன்ற ஜனநாயக நாட்டில் சிறுவர்களின் மத அடையாளத்தை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மாணவனின் பெற்றோர், “எங்கள் மகள் தனது மத பாரம்பரியத்தை பின்பற்றியதற்காகவே பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குழந்தையின் மனநிலைக்கும், மத உரிமைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இந்திய சமூகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர், பல்வேறு மதங்களை மதிக்கும் சூழல் பள்ளிகளில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் மத அடையாளங்களை மதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் கல்வி துறை இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மத சுதந்திரம், கலாச்சார உரிமைகள், குழந்தைகளின் மனநலம் ஆகியவை தொடர்பான விவாதங்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




