20 ஆண்டுகளில் மிக சக்தி வாய்ந்த சூரிய புயலை சூரியன் வெளியிட்டுள்ளது.
20 ஆண்டுகளில் சக்தி வாய்ந்த சூரிய புயல்
கடந்த 20 ஆண்டுகளில் மிக சக்தி வாய்ந்த சூரிய புயலை சூரியன் வெளியிட்டுள்ளதாக தேசிய வானிலை சேவையின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் (SWPC) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக SWPC வெளியிட்டுள்ள X பதிவில், “ஒரு தீவிரமான S4 சூரிய கதிர்வீச்சு புயல் இப்போது நடைபெற்று வருகிறது. இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய சூரிய கதிர்வீச்சு புயல்.
கடைசியாக S4 புயல் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபரில் காணப்பட்டது. இது விண்வெளி ஏவுதல், விமான போக்குவரத்து, செயற்கைகோள் செயல்பாடு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுத்தியது” என தெரிவித்துள்ளது.
இந்த புயலானது தீவிர அளவுகோலில் 5க்கு 4 என்ற அளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சூரிய கதிர்வீச்சு புயலின் இரண்டாவது மிக உயர்ந்த நிலை ஆகும்.
இந்த அளவு புயல்கள் அரிதானவை என்றும், பல நாட்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன பாதிப்பு?
மேலும், துருவப் பகுதிகளில் உயர் அதிர்வெண் தகவல்தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்படும் என்றும், உயரத்தில் பறக்கும் விமானங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு கதிர் வீச்சு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Credit : X.com/NWSSWPC
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்வதற்காக SWPC நாசாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
சூரிய எரிப்பு, கதிர்வீச்சு புயலைத் தூண்டியதோடு, வலுவான கடுமையான புவி காந்தப் புயலையும் ஏற்படுத்தியுள்ளது. இது திங்கள்கிழமை பிற்பகல் G4 ஆக வலுப்பெற்று பூமியை வந்தடைகிறது.

இதன் மூலம் அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் வடக்கு விளக்குகள் தெரியலாம்(Northern Lights) என SWPC தெரிவித்துள்ளது.
மே 2024 இல் இதேபோன்ற புவி காந்தப் புயலின் போது, சில GPS சார்ந்த விவசாய உபகரணங்கள் சிறிது நேரம் செயலிழந்தன. ஆனால் பரவலான மின்தடைகள் தவிர்க்கப்பட்டது.




