காசாவை நிர்வகிக்க டிரம்ப் அமைத்த அமைதி வாரியத்தில் இந்திய வம்சாவளி ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
காஸா அமைதி வாரியம்
கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி 2025 வரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வந்தது.

Credit : Atia Darwish/Zuma Press
இந்த போரில், இதுவரை 60,000 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், காஸா அமைதி வாரியம்(board of peace gaza) என்ற அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உருவாக்கியுள்ளார்.

Credit : Saul Loeb/AFP
இந்த அமைப்பு, குறிப்பிட்ட காலத்திற்கு காசாவின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இருந்து பாலஸ்தீன ராணுவம் முற்றிலுமாக வெளியேற வேண்டும், போரில் உருக்குலைந்துள்ள காஸாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், ராணுவம் அல்லாத எந்த அமைப்பும் ஆயுதம் ஏந்தக் கூடாது; மீதமுள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 20 விதிமுறைகளை காஸா அமைதி வாரியம் முன்மொழிந்துள்ளது.
இது குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், “காசாவின் 20 அம்ச அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துவிட்டோம்.
எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் ஆதரவுடன், ஹமாஸுடன் ஒரு விரிவான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை உறுதி செய்வோம். இதில் அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைப்பதும், ஒவ்வொரு சுரங்கப்பாதையையும் அகற்றுவதும் அடங்கும். ஹமாஸ் உடனடியாக தனது வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
வாரிய உறுப்பினர்கள்
இந்த குழுவில், பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உள்ளனர்.

மேலும், தனியார் பங்கு நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் CEO மார்க் ரோவன், உலக வங்கியின் தலைவரான அஜய் பங்கா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் ஐ.நா. மத்திய கிழக்கு தூதருமான நிக்கோலே மிலாடெனோவ் இந்த அமைதி வாரியத்தின் உயர் பிரதிநிதியாக இருப்பார் என வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அஜய் பங்கா
இதில் அஜய் பங்கா இந்திய வம்சாவளி நபர் ஆவார். 1957 ஆம் ஆண்டில் மஹாராஷ்டிராவில் பஞ்சாபி சீக்கிய குடும்பத்தில் பிறந்த அஜய் பங்கா, 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

நெஸ்லே, பெப்சிகோ, சிட்டி குழுமம் ஆகியவற்றில் பணியாற்றிய அஜய் பங்கா அதன் பின்னர் மாஸ்டர் கார்டின் CEO ஆக நியமிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு முதல் உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா செயல்பட்டு வருகிறார்.




