அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
அமேசான் பழங்குடியின மக்கள்
அமேசான் மழைக்காடுகளில் வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் வாழ்ந்து வரும் மாஷ்கோ பிரோ பழங்குடியினரின் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதனை லெக்ஸ் ஃபிரிட்மேன்(Lex Fridman) பாட்காஸ்டில் சூழலியல் ஆர்வலரான பால ரொசோலி என்பவர் பகிர்ந்துள்ளார்.
இயற்கையாகவே வெளியாட்களை கண்டால் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் மாஷ்கோ பிரோ பழங்குடியினர், வெளியான அந்த வீடியோ காட்சிகளில், தங்கள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு உணவு பொருட்கள் நிரப்பட்ட படகை ஏற்றுக் கொண்டதை பார்க்க முடிகிறது.
பல நூற்றாண்டுகளாக மாறாத பழக்கங்களை கொண்ட மாஷ்கோ பிரோ பழங்குடியினரை துல்லியமாக பார்த்தது இதுவே முதல் முறை என்று ரொசோலி தெரிவித்துள்ளார்.
ஆபத்தில் பழங்குடியினரின் வாழ்க்கை
வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வரும் இவர்கள், தற்போது அடிக்கடி வெளியே தென்படுவதற்கான முக்கிய காரணம் அவர்களது வாழ்விடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதே ஆகும்.

ஏற்கனவே பல பழங்குடியினரின் பூர்வீக நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சர்வைவல் இன்டர்நேஷனல் மற்றும் FENAMAD அமைப்புகள் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஊடுருவல் மற்றும் மரத் தொழிற்சாலைகளுக்காக காடுகளுக்குள் போடப்படும் நீண்ட தூர சாலைகள் போன்றவை பழங்குடியினர் அடிக்கடி தென்படுவதற்கான காரணங்களாக சொல்லபடுகிறது.
மாஷ்கோ பிரோ பழங்குடியினரின் சாதாரண காய்ச்சல் மற்றும் சளி போன்ற பாதிப்புகளுக்கு கூட நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால், மரம் வெட்டுபவர்கள் உடனான சிறிய தொடர்பு கூட அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.




