லண்டனில் உள்ள ஈரானிய தூதரகம் முன்பு நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் போது காவலர் பலர் காயமடைந்துள்ளனர்.
ஈரானிய தூதரகம் முன்பு வன்முறை
வெள்ளிக்கிழமை லண்டனின் சவுத் கென்சிங்டன் பகுதியில் அமைந்துள்ள ஈரானிய தூதரகம் முன்பு நடந்த போராட்டம் மோதலாக வெடித்தது. போராட்டக்காரர் ஒருவர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டிச் சென்று தூதரக கட்டிடத்தின் மேல் பறந்த ஈரானிய கொடியை அகற்றினார்.

கிட்டத்தட்ட இரவு 8.45 மணி அளவில் போராட்டமானது வன்முறையாக வெடித்ததை அடுத்து சம்பவம் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் வரவழைக்கப்பட்டது.
காவலர்கள் மீது தாக்குதல்
இந்த மோதல் சம்பவத்தின் போது பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர், அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கியதால் சம்பவ இடத்தில் நிலைமை மோசமடைந்ததாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரானிய தூதரகத்தின் மீது ஏறிய அந்த நாட்டு கொடியை கழற்றிய நபர் மீது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், தூதரக எல்லைக்குள் அத்துமீறுதல், காவல்துறை அதிகாரிகளை தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் நிலைமையை கட்டுப்படுத்த குறிப்பிட்ட பகுதியை சுற்றி அதிகாரிகள் பிரிவு 35 கலைப்பு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதலில் 4 பேர் வரை காயமடைந்து இருப்பதாக மருத்துவமனை உதவியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.




