தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol), 2024-இல் அறிவித்த இராணுவ சட்டம் (Martial Law) தொடர்பாக குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு, 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
யூன் மீது அதிகார துஷ்பிரயோகம், நீதியைத் தடுக்க முயற்சி, போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதல் பெற்றதாக போலி ஆவணங்களை உருவாக்கி பின்னர் அழித்தது உள்ளிட்ட செயல்களில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

“அரசியலமைப்பையும் சட்டத்தையும் காக்கும் கடமை இருந்தும், யூன் அதனை மீறியுள்ளார்..” என நீதிபதி கூறியுள்ளார்.
இந்த வழக்கு, யூனுக்கு எதிரான நான்கு முக்கிய வழக்குகளில் முதல் தீர்ப்பு ஆகும். மிகக் கடுமையான குற்றச்சாட்டான கிளர்ச்சி (Insurrection) தொடர்பான வழக்கில், வழக்கறிஞர்கள் மரண தண்டனை கோரியுள்ளனர். அதற்கான தீர்ப்பு பிப்ரவரியில் வெளியாகும்.
தீர்ப்பளிக்கப்பட்ட நாளில், சுமார் 100 ஆதரவாளர்கள் நீதிமன்றம் வெளியே கூடி, “Yoon, again! Make Korea great again” எனக் கோஷமிட்டனர். சிலர் நீதிபதியை எதிர்த்து குரல் எழுப்பினர்.
யூன், குற்றச்சாட்டுகளை மறுத்து, “இராணுவ சட்ட அறிவிப்பில் எந்த நடைமுறை தவறும் இல்லை” என வாதிட்டார். ஆனால், நீதிமன்றம் அவரது வாதங்களை நிராகரித்தது.
யூனின் தண்டனை, தென் கொரிய அரசியலில் ஆழ்ந்த பிளவுகளை மீண்டும் வெளிப்படுத்துகிறது. அவரது ஆதரவாளர்கள் இன்னும் அவரை ‘தியாகி’ எனக் கருதுகின்றனர்.




