கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் பழங்கால புதையல் அல்ல என தெரியவந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் லக்குண்டி கிராமத்தில் வீடு கட்ட நிலைத்த தோண்டியபோது தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த செய்தி, மக்கள் மத்தியில் பழமையான பொக்கிஷம் கிடைத்தது என்ற ஆர்வத்தை அதிகரித்தது.
ஆனால், தொல்லியல் ஆய்வு நிறுவன (ASI) அதிகாரிகள், அந்த தங்கம் பழமையான பொக்கிஷமோ, புதையலோ அல்ல என்று விளக்கம் அளித்துள்ளனர்.

அதிகாரிகள் கூறியதாவது:
கண்டெடுக்கப்பட்ட தங்கம், பழைய காலத்து அரசர் அல்லது கோவில் பொக்கிஷம் அல்ல. இது, சமீபத்திய காலத்தில் புதைக்கப்பட்ட தனிப்பட்ட நபரின் சொத்தாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
“கண்டுபிடிக்கப்பட்ட பல ஆபரணங்கள் உடைந்து கிடக்கின்றன. அவை வீட்டின் சமையலறை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், நம் முன்னோர்கள் கருவூலம் இல்லாததால் சமையலறை அடுப்பு பகுதியில் நகைகளை புதைத்து மறைத்து வைத்திருந்தனர். இது கடந்த காலத்தில் ஒரு நடைமுறையாக இருந்தது, இப்போது கண்டுபிடிக்கப்பட்டதும் அது போன்ற ஒரு ஒன்றாகவே தெரிகிறது”என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ASI விதிகளின்படி, பொக்கிஷம் எனக் கருதப்பட வேண்டுமெனில், அது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்க வேண்டும். லக்குண்டியில் கண்டெடுக்கப்பட்ட தங்கம், அந்த அளவுகோலை பூர்த்தி செய்யவில்லை.
அதிகாரிகள் மேலும், “இது சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டது. உரிமையாளர் யார் என்பதை பொலிஸார் மற்றும் வருவாய் துறை ஆராயும்” என தெரிவித்துள்ளனர்.
லக்குண்டி, கர்நாடகாவில் பழமையான கோவில்கள் மற்றும் சின்னங்கள் காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அங்கு தங்கம் கண்டெடுக்கப்பட்டதால், அது பழைய பொக்கிஷம் என மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், ASI-யின் விளக்கம், அந்த நம்பிக்கையை முறியடித்துள்ளது.




